Advertisment

பழனி கோயில் திருமஞ்சன கட்டண உரிமை யாருக்கு? ஐகோர்ட் முக்கிய உத்தரவு

அர்ச்சகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து, 10 ஆண்டுகளாக நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madurai High Court judge verdict in Palani Thirumanjana fee collection issue

பழனி திருமஞ்சன கட்டண வசூல் விவகாரத்தில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு

பழனி முருகன் கோயில் திருமஞ்சனத்திற்கான கட்டணத்தை பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பழனி முருகன் கோயில் அர்ச்சகர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisment

அதில், "பழனி முருகன் கோயிலில் பூஜைகள் செய்வதற்கான கட்டணம் இந்து சமய அறநிலைய துறையின் ஆணையர் சார்பாக இறுதி செய்யப்பட்டது. ஒரு பூஜைக்கு ரூபாய் 9 ரூபாய் 40 பைசா என நிர்ணயம் செய்யபட்டுள்ளது.

இதில், கோயில் பங்காக 6 ரூபாய் 40 பைசாவும், திருமஞ்சனம் நீருக்கு 75 பைசாவும், சிரமதட்சணைக்கு 1 ரூபாயும், சொர்ண புஷ்பத்திற்கு 1 ரூபாயும் அத்தியான பட்டருக்கு 25 பைசாவும் என பிரித்து பங்கிட்டு கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இதில் திருமஞ்சனம் செய்வதற்கான தொகையில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என அர்ச்சகர் தரப்பினர் பழனி மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு விசாரணை செய்யப்பட்டு அர்ச்சகரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் திருமஞ்சனம் பூஜை செய்வதற்கான தொகையில் தங்களுக்கும் பங்கு வேண்டுமென குருக்கள் அர்ச்சகர் தரப்பில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

தற்போது பூஜைக்கான 75 பைசா தொகையைப் பெற அர்ச்சகர்கள் தகுதியுடையவர்களா? அல்லது பண்டாரங்கள் தகுதியுடையவர்களா? இல்லை இருவருக்கும் பங்கீடு செய்வதா? என முடிவு செய்ய வேண்டி உள்ளது.

நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்கள், தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு ஆவணங்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பாக தாக்கல் செய்த ஆவணங்களைப் பார்க்கும்போது ஆரம்ப காலம் முதலே பண்டாரங்கள் தான் திருமஞ்சன நீரை தொன்றுதொட்டு எடுத்து வருகிறார்கள், குருக்களுக்கு அதில் உரிமை வழங்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.

மேலும், இந்த உரிமை பண்டாரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. குருக்கள் திருமஞ்சன சேவை நீரை எடுத்து வருவதாக எங்கும் குறிப்பிடவில்லை. பண்டாரம் சமூகத்தை சேர்ந்தவர்களே திருமஞ்சனத்திற்கான புனித நீரை அர்த்தமண்டபம் வரை சுமந்து வருகிறார்கள்.

எனவே திருக்கோவில் நிர்வாகம் நிர்ணயித்துள்ள தொகையை பெற்றுக்கொள்ள பண்டாரம் சமூகத்தைச் சேர்ந்தவர்களே தகுதியானவர்கள் என குறிப்பிட்டு, கீழமை நீதிமன்ற உத்தரவை உறுதி செய்த நீதிபதி, அர்ச்சகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து, 10 ஆண்டுகளாக நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில் திருமஞ்சனத்திற்கான கட்டணத்தை பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள் என உத்தரவிட்டுள்ளார்.

செய்தியாளர் செந்தில் குமார்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment