green fungus infection : கொரோனா தொற்று சிகிச்சை பெற்றும் வீடு திரும்பும் பலருக்கு சில நாட்களுக்கு நோயின் தாக்கம் இருக்கும் என்று மருத்துவர்கள் கூறி வருகின்ற நிலையில், சிலர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வருகின்றனர். சென்னையில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்த 32 வயது நபருக்கு பச்சை பூஞ்சை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு சென்னை நந்தனம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர்.
சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த அந்த நோயாளிக்கு உடல் சோர்வு, உடல் வலி, காய்ச்சல், மஞ்சள் நிறத்தில் சளி வெளியேறுதல், கண்களை சுற்றி வலி போன்ற இன்னல்களை அனுபவித்து வந்ததாக மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவருக்கு செய்யப்பட்ட எண்டோஸ்கோப்பில் அவருக்கு சைனசிடிஸ் இருப்பது உறுதியான நிலையில் அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
கருப்பு நிற பூஞ்சை மாதிரி அவர் உடலில் இருந்து பெறப்பட்டு, ஹிஸ்டோபோதாலஜிகல் பரிசோதனை மற்றும் பூஞ்சை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவருக்கு அஸ்பெர்கிலஸ் என்ற பச்சை பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
காது, மூக்கு, தொண்டை நோய் சிகிச்சை நிபுணர்கள் அவருக்கு மேற்கொண்டு பரிசோதனை நடத்தி, பூஞ்சை பாதிக்கப்பட்ட இடத்தில் இருந்து பூஞ்சையை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளனர். நீரிழிவு நோயைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான சிகிச்சையுடன், நோயாளிக்கு பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் மற்றும் இதர மருந்துகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்று மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil