Mandous Cyclone News: தற்போது நிலவி வரும் புயல் எச்சரிக்கை காரணமாக பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசாங்கம் அறிவித்துள்ளது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இன்று இரவு நேர பேருந்து சேவையை ரத்து செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
வடதமிழகத்திற்கு அருகில் வரும் மாண்டஸ் புயல் நிலவரத்தை தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறுகிறார்.
"நேற்று நள்ளிரவு சென்னையில் கனமழை பெய்திருக்கிறது. பெரும்பாலான இடங்களில் 60இல் இருந்து 80 மில்லிமீட்டர் வரை மழைநீர் பதிவாகி இருக்கிறது.
சென்னை, மரக்காணம், கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய இடங்களில் கடும் கடல் சீற்றம் காணப்படுகிறது. தமிழகத்தில் வேறு எந்த மாவட்டங்களிலும் இந்த அளவிற்கு மழை பெய்யவில்லை.
காலையில் இருந்து சென்னையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிற நிலையில், மாலையில் புயலின் மையப்பகுதியை சுற்றியுள்ள மேகங்கள் சென்னையை நோக்கி வருவதால் தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மாலை வரவிருக்கும் அடர்ந்த மேகங்களினால் ஒருமணி நேரத்தில் 100-150 மில்லிமீட்டர் மழை பதிவாகும் வாய்ப்பு உள்ளது.
மேலும், வடதமிழகத்தில் விழுப்புரம் மற்றும் கடலோர மாவட்டங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் இன்று இரவு முதல் நாளை காலை வரை 100-150 மில்லிமீட்டர் அளவிற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் 200 மில்லிமீட்டர் அளவிற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்த புயலின் காரணமாக, மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இருந்து காற்று வீசக்கூடும். மேலும், சென்னையின் தெற்கில் உள்ள கேளம்பாக்கம் மற்றும் மாமல்லபுரம் ஆகிய இடங்களுக்கு அருகில் புயல் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது" என்று அவர் கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.