எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம். நீட் தேர்ச்சி பெற்றவர்களுக்காக வாய்ப்பு இது!
எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது நாடு முழுவதும் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக நடைமுறை ஆரம்பமாகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உள்ள இடங்கள் 3,050! இவற்றில் அகில இந்திய கோட்டாவுக்கு 15 சதவிகித இடங்களை ஒப்படைக்க வேண்டும். அதுபோக 2,594 இடங்கள் தமிழ்நாட்டில் பயின்ற மாணவர்களுக்கு கிடைக்கும்.
பி.டி.எஸ். படிப்புக்கு தமிழ்நாட்டில் 200 இடங்கள் உள்ளன. அவற்றில் அகில இந்திய கோட்டாவாக 30 இடங்கள் கொடுத்த பிறகு எஞ்சிய 170 இடங்களுக்கு தமிழக மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் நாற்பதாயிரம் பேரும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்!
தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இன்று (ஜூன் 11) முதல் மேற்படி படிப்புகளுக்கான விண்ணப்பம் வினியோகம் செய்யப்படுகிறது. விண்ணப்பங்களை நேரடியாக மருத்துவக் கல்லூரிகளில் பெறலாம். அதிகாரபூர்வ இணையதளங்களான www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 19.
நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் கவுன்சலிங் மூலமாக இந்தப் படிப்புக்கு மாணவ, மாணவிகளின் சேர்க்கை நடைபெறும்.