மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்கிறவர்கள் மதிமுக நலனுக்கு பெருங்கேடு செய்பவர்கள் என மதிமுக.வினருக்கு வைகோ எச்சரிக்கை விடுத்தார்.
மு.க.ஸ்டாலின் மீது மதிமுக.வினர் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனம் செய்வதாக வைகோ கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து மலேசியாவில் உள்ள பினாங்கு சென்றிருக்கும் வைகோ, அங்கிருந்து விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆருயிர்ச் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் குறித்தோ, நம் இயக்கத் தோழர்கள் முகநூலிலோ இணையதளத்திலோ, வாட்ஸ் அப்பிலோ, சமூக வலைதளங்களிலோ எந்த விமர்சனமும் செய்யக்கூடாது. அப்படிச் செய்பவர்கள் மதிமுக நலனுக்குப் பெருங்கேடு செய்பவர்கள் ஆவார்கள்.
இதனை மீறிச் செயல்படுகின்றவர்கள் ம.தி.மு.க.வினராகவோ, ஆதரவாளர்களாகவோ, பற்றாளர்களாகவோ கருதப்பட மாட்டார்கள். ம.தி.மு.க.வுக்கும் அவர்களுக்கும் எள் அளவு தொடர்பும் இல்லை.’ இவ்வாறு வைகோ கூறியிருக்கிறார்.