வெளிமாநில தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாகக் கூறி சென்னை தொழிலதிபரிடம் ரூ.71.63 லட்சம் பெற்று மோசடி செய்த நபரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், தொழிலதிபர் ஒருவர் புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த 2021ம் ஆண்டு சீயோன் ஆன்லைன் சேவை (Zion Online Service) நடத்தி வரும் ஆந்திரா மாநிலம் நெல்லூரை சேர்ந்த வடலபள்ளி விஜயகுமார் என்பவர் எனக்கு அறிமுகமானார்.
அப்போது, எனது மகளை மருத்துவக் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கு விஜயகுமார், தனது மகளுக்கு புதுச்சேரி, மகாராஷ்ரா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய இங்களில் உள்ள ஏதாவது ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி தருவதாக உறுதி அளித்தார். இதற்காக ரூ.71.63 லட்சம் பெற்றார். ஆனால் சொன்னப்படி எனது மகளுக்கு எந்த கல்லூரியிலும் சீட் வாங்கி தரவில்லை. என்னை ஏமாற்றி விட்டார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என மனுவில் புகார் கூறியுள்ளார் .
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டதன் படி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் கீதாஞ்சலி மேற்பார்வையில் உதவி கமிஷனர் சிவா மற்றும் இன்ஸ்பெக்டர் சிவகுமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர். அப்போது சீயோன் ஆன்லைன் சேவை நடத்தி வரும் வடலபள்ளி விஜயகுமார், இதுபோல் பலரிடம் மருத்துவ சீட் வாங்கி தருவதாக பல லட்சம் பறித்தது தெரியவந்தது.
இவர் மீது ஆந்திர மாநிலம் நெல்லூர் வேதபாளையம் காவல் நிலையம், தர்காமிட்டா காவல் நிலையத்தில் மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
இதைதொடர்ந்து தனிப்படை போலீசார் ஆந்திரா சென்று அம்மாநில போலீசார் உதவியுடன் வடலபள்ளி விஜயகுமாரை ஓங்கோல் பகுதியில் வைத்து கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து, சிறையில் அடைத்தனர்.