தமிழகத்தில் 2017-2018-ஆம் கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்பு கலந்தாய்வை நடத்த வேண்டும் எனவும், செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்க வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் செவ்வாய் கிழமை உத்தரவிட்டது.
இதையடுத்து, நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் புதன் கிழமை வெளியிடப்படும் எனவும், வியாழக்கிழமை முதல் கலந்தாய்வு தொடங்கும் எனவும் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
அதன்படி, புதன் கிழமை காலையில் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கீழ்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் வெளியிட்டார்.
தமிழகத்தில் 3,536 பொது மருத்துவ இடங்கள் உள்ளன. 100 பல் மருத்துவ இடங்கள் உள்ளன. அதேபோல், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளிலும் இடங்கள் உள்ளன. குறிப்பாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,445 இடங்கள் உள்ளன. மீதமுள்ள இடங்கள் தமிழக அரசுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகள் மூலம் ஒப்பளிக்கும் இடங்களாகும். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 127 இடங்களும், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரிகளில் 588 இடங்களும் அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டவையாகும். முதல்கட்டமாக, வியாழக்கிழமை மாற்றுத் திறனாளிகள், விளையாட்டுப் பிரிவினர், ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. வரும் 25-ஆம் தேதி முதல் வழக்கமான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படும். செப்டம்பர் 10-ஆம் தேதி வரை பல் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தரவரிசைப்பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் ராதாகிருஷ்ணன் பேசியதாவது, “
“அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட இடங்கள், நிர்வாக ஒதுக்கீடுகளுக்கான இடங்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்காக மொத்தம் 31,629 பேர் விண்ணப்பித்தனர். அதில், 27,212 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. ஆண்கள் 11,897 மற்றும் பெண்கள் 19,731. மாற்றுத்திறனாளிகள் 20 பேர், விளையாட்டு பிரிவில் விண்ணப்பித்தவர்கள் 358 பேர், முன்னாள் ராணுவ வீரர்களின் மகன்கள்/மகள்கள் 471 பேர். இவர்களுள் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 27,488 பேர், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 3,418 பேர், ஐ.சி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தவர்கள் 207 பேர், மற்ற மாநிலத்தவர்கள் 516 பேர், கடந்தாண்டு நீட் தேர்வெழுதியவர்கள் 5,636 பேர்.”, என தெரிவித்தார்.
மேலும், நிர்வாக ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வையும் தமிழக அரசே நடத்தும். அதற்காக விண்ணப்பித்தவர்கள் 20,444 பேர்.
மாநில ஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலை வெளியிட்டதுடன், முதல் 20 இடங்களை பிடித்தவர்களின் பட்டியலையும் ராதாகிருஷ்ணன் வெளியிட்டார்.
அவர்களுள் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்கள்
1. சுரேஷ், ஓசூர், கிருஷ்ணகிரி
2. முகேஷ் கண்ணா, கோவை
3. சையத் அஃபீஸ்,
4. ஐஸ்வர்யா ஸ்ரீநிவாசன், சென்னை
5.ஜீவா.டி.ஆர்., சென்னை
6. தினேஷ், வேலூர்
7. கபிலன், தருமபுரி
8. ஜூஹன்னா மேரி ராய், சென்னை
9. அஷ்வின், தூத்துக்குடி
10. அனந்தராஜ்குமார், நாகர்கோவில்
மேலும், ராதாகிருஷ்ணன் பேசியதாவது, “அவசரகதியில் கலந்தாய்வு நடத்தப்படுவதால் வெள்ளிக்கிழமை விநாயகர் சதுர்த்தியாக இருந்தாலும் கலந்தாய்வு நடத்தப்படும். மாணவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படுகிறது. செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை முடிக்காவிட்டால் மீதமுள்ள இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டுவிடும்.
மாணவர்களின் பெற்றோர்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். விண்ணப்பித்த மாணவர்கள் தமிழ்நாடு சுகாதார துறை இணையத்தளம் மற்றும் மருத்துவ மாணவர் தேர்வு இணையத்தளத்தை தொடர்ந்து கவனிக்க வேண்டும். அதில், கலந்தாய்வில் பெயர் உள்ளவர்கள் ஓமந்தூரார் அரசு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைக்கு நேரடியாக வந்து கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். மாணவர்களுக்கு தகவல் வராவிட்டாலும் நேரடியாக கவுன்சிலிங்குக்கு வரலாம்.”, என கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.