மருத்துவ மேற்படிப்பில் சேர, கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவதற்காக தொலை தூர பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளை வகைப்படுத்தி பிறப்பித்த அரசாணையை எதிர்த்த வழக்கில் பிறப்பிக்கும் உத்தரவுக்கு பிறகே மாணவர்கள் தரவரிசைப் பட்டியல் வெளியிட முடியும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கின் விசாரணையை, ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
மருத்துவ மேற்படிப்பில் சேர, தொலை தூர பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 10 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.
வரும் 2018- 19 ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு அரசு மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண்கள் வழங்குவதற்காக, தொலைதூர பகுதிகள், எளிதில் அணுக முடியாத பகுதிகளை வகைப்படுத்தி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
கடந்த மாதம் 23 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சாவூர் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களாக பணியாற்றும் பிரவின் உள்பட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு, நீதிபதி வைத்தியநாதன் முன் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் பிறப்பிக்கும் உத்தரவு அடிப்படையில், சலுகை மதிப்பெண்கள் வழங்கி, மாணவர்கள் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு நீதிபதி வைத்தியநாதன் தள்ளிவைத்தார்.