கே.கே. நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் படித்த அஸ்வினி என்ற மாணவியை, கல்லூரி வாயிலிலேயே வைத்து ஒருவர் கொலை செய்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, கொலை செய்த நபரை கட்டி உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சென்னை கே.கே. நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம் படித்து வந்தவர் அஸ்வினி. அவர் இன்று கல்லூரி முடிந்து வெளியே வந்த போது, மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தினார். இதனால், படுகாயமடைந்த அஸ்வினி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அஸ்வினி உயிரிழந்துள்ளார்.
இதற்கிடையில் கொலை செய்த மர்ம நபரை, ஆயுதத்துடன் பொதுமக்கள் பிடித்து அடித்து உதைத்தனர். இதன்பின், படுகாயமடைந்த அவரை போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கொலை செய்த நபரின் பெயர் அழகேசன் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், இதற்கு முன்னதாக அழகேசன் மீது அஸ்வினி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பது தெரியவந்துள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் ஏற்கனவே அழகேசனை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
அழகேசனின் தொடர் தொல்லையால், மதுரவாயலைச் சேர்ந்த அஸ்வினி ஜாபர்கான்பேட்டையில் தங்கி, கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
முன்பு கைது செய்யப்பட்டிருந்த அழகேசன், பிணையில் வெளிவந்து, கல்லூரி வாயிலில் காத்திருந்து மாணவி அஸ்வினியின் கழுத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். இதுகுறித்த Updates இங்கே,
மாலை 07.00 - அஸ்வினியை கொலை செய்த பின், அழகேசனும் தற்கொலைக்கு முயன்றுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாலை 06.15 - கடந்த பிப்ரவரி மாதம், அழகேசன் மீது அஸ்வினி போலீசில் புகார் கொடுத்த கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.
மாலை 05.00 - கொலை செய்த அழகேசன், சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணையில் மேலும் சில புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது, அழகேசனுக்கும், அஷ்வினிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்று இருக்கிறது. பெற்றோரின் சம்மதம் இல்லாமல், இந்த திருமணம் நடந்துள்ளது. அதன்பின், அழகேசன் மீது அஷ்வினியின் பெற்றோர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அழகேசனை பிரிந்து செல்ல எழுத்துப் பூர்வமாக அஷ்வினி உறுதி அளித்து இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
மாலை 04.20 - சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் கூறுகையில், "மாணவி அஸ்வினி கொலை செய்யப்பட்டது தொடர்பாக விசாரிக்க எழும்பூர் வட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இனி இது போன்று, கொலைகள் நடக்காது என நம்புவோம்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.