ஆர் ஸ்ரீலேகா தான் கேரள மாநிலத்தில் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியாவார். கடந்த 1987-ம் ஆண்டு முதல் ஐபிஎஸ் அதிகாரியான ஸ்ரீலேகா, அடுத்த மூன்று ஆண்டுகளில் கேரள மாநிலத்தில் முதல் பெண் எஸ்.பி-யானார். இந்த நிலையில், தற்போது கேரள மாநிலத்தின் முதல் பெண் டி.ஜி.பி- அந்தஸ்த்தை பெற்றுள்ளார் ஸ்ரீலேகா.
புதன் கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தாசான்கரி, அருண் குமார் சின்கா, சுரேஷ் குமார் மற்றும் கூடுதலாக 8 பேர் ஆகியோருக்கு டி.ஜி.பி அந்தஸ்த்துக்கு பதவி உயர்வு வழங்க முடிவுசெய்யப்பட்டது.
தற்போதைய நிலையில் ஸ்ரீலேகா, சிறைத்துறை ஏ.டி.ஜி.பி ஆக இருந்து வருகிறார். சிவில் தேர்வில் வெற்றி பெறுவதற்கு முன்னதாக கல்லூரி விரிவுரையாளராகவும், ரிசர்வ் வங்கியிலும் பணியாற்றியிருக்கிறார். 1886-ம் சிவில் தேர்வில் வெற்றிபெற்று கேரளத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை தனதாக்கினார். சி.பி.ஐ-க்கு செல்வதற்கு முன்னதாக, திரிச்சூர், ஆழப்புளா, பதனம்திட்டா ஆகிய பகுதிகளில் மாவட்டத்தின் முதன்மை அதிகாரியாக (district chiefs)பணியாற்றியிருக்கிறார்.
சிபிஐ-யில் சோதனை டீமில் இருக்கும்போது, செல்வாக்கு மிகுந்த நபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து அதிரடி காட்டியதனால் இவருக்கு “ரெய்டு ஸ்ரீலேகா” என்ற பெயரும் உண்டு. கடந்த 2005-ம் ஆண்டு, ஐ.ஜி-ஆக பணியாற்றி ஸ்ரீலேகா பின்னர், கேரள ரப்பர் மார்க்கெட்டிங் ஃபெடரேஷனுக்கு தலைமை பொறுப்பெற்று வழிநடத்தினார். 2013-ம் ஆண்டு விஜிலன்ஸ் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் ஏ.டி.ஜி.பி-யாக பணியாற்றிய சமயத்தில், குடியரசுத் தலைவர் போலீஸ் மெடல் ஸ்ரீலேகாவிற்கு வழங்கப்பட்டது.
ஸ்ரீலேகா மலையாளத்தில் பல்வேறு புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அவைகளில் 3 புத்தகங்கள் குற்றப் புலனாய்வு தொடர்பாக எழுதப்பட்டதாகும். டிரான்ஸ்போர்ட் கமிஷ்னராக பணியாற்றிய போது மாநிலத்தில் சாலை விபத்து ஏற்படுவதை குறைத்ததோடு, புதிய சாராம்சங்களையும் புகுத்தினார். ஸ்ரீலேகா ஸ்காட்லாந்து போலீஸில், ஸ்பெஷல் டிரைனிங்கும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.