மேட்டூர் அணையிலிருந்து ஜூலை 19-ம் தேதியிலிருந்து பாசனத்துக்குதண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
மேட்டூர் அணை வழக்கமாக திறக்கும் நாளான ஜூன் 12-ம் தேதி அன்றுபோதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால் பாசனத்திற்காக நீர் திறக்க இயலாதநிலையை கருத்தில் கொண்டு, அரசு ரூபாய் 115.67 கோடிமதிப்பில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை அறிவித்தது. இதன்விளைவாக டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்து. இன்றைய (நேற்று) நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.18 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 99.372 கன அடியாகவும், அணையின் நீர்இருப்பு 51.72 டி.எம்.சி. அடியாகவும் உள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணை நீர்மட்டம் 90 அடியை நெருங்கி வருகிறது. இன்று (ஜூலை 16) காலை நேர நிலவரப்படி, அணைக்கு வரும் நீரின் அளவு 45,316 கனஅடியில் இருந்து 75,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 83.20 அடியில் இருந்து 87.92 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்இருப்பு 50.30 டிஎம்சி.,யாகவும், குடிநீர் தேவைக்காக திறந்து விடப்படும் நீரின் அளவு 1000 கனஅடியாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நாளை மறுதினம் முதல் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்ற முதலமைச்சரின் உத்தரவை வரவேற்றுள்ள தமிழக விவசாயிகள், உடனடியாக இரவு, பகல் பாராமல் அனைத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.