கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால், மேட்டூர் அணையின் நீர்வரத்து 23 ஆயிரம் 501 கன அடியாக குறைந்துள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகள் முழு கொள்ளளவை எட்டின. தற்போது, கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துவிட்டது, எனவே அணைகளின் நீர் பிடிப்பு அளவும் குறைந்துள்ளது. இதனால் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வரும் உபரிநீரின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. நேற்று ஒக்கேனக்கல் அருவிக்கு வினாடிக்கு 27 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில், இன்று காலையில் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதனிடையே, ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் இன்று 23வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரத்து 501 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 26 ஆயிரத்து 71 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 900 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.