சிவகாசியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது, 2 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகாசியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவின் போது, சிவகாசி நகராட்சியுடன் 9 ஊராட்சியை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மேலும், திருத்தங்கல்லில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்றும், விருதுநகர் மருத்துவமனையில் ரூ.9 கோடியில் சிறுநீரக, டாயலிசிஸ் அமைக்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனிடையே, தேசிய கீதம் பாடும்போது, அங்கிருந்த மேடை முன்பு தாய் மற்றும் மகள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜபாளையத்தை சேர்ந்த அந்த பெண்களை அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு அழைத்து சென்ற கணவரை போலீஸார் விடுவிக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.