தனியார் நிறுவன பால் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு தனியார் பால் முகவர்கள் சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்த நிலையில், பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பால் மற்றும் பால் பொருட்களில் ரசாயம் கலந்த நிறுவனங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டார். அப்போது நெஸ்லே மற்றுட் எவ்ரிடே நிறுவனத்தின் பால் பவுடர்களின் காஸ்டிக் சோடா, ப்ளீச்சிங் பவுடர் கலப்படம் செய்யப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார். மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பாலிலும் காஸ்மிக் சோடா மற்றும் ப்ளீச்சிங் பவுடர் கலக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிறுவனங்களின் பால் பொருட்களை மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் சோதனை செய்த பின்னர் கிடைத்த ஆய்வறிக்கையின்படியே இவ்வாறு கூறுவதாக அவர் தெரிவித்தார். அமைச்சர் கூறிய இந்த குற்றச்சாட்டு மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
இந்த நிலையில், புதியதலைமுறை தொலைக்காட்சிக்கு நெஸ்லே நிறுவனம் விளக்கம் அளித்தது. அப்போது, பால் பொருட்கள் சோதனை தொடர்பாக எந்த அறிக்கையும் எங்களுக்கு கிடைக்கவில்லை. நெஸ்லே பொருட்களின் தரம் குறித்து வாடிக்கையாளர்கள் சந்தேகப்பட தேவையில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்தது.