தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெற்ற நீர்வளத் துறை மானியக் கோரிக்கையின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உரையாற்றினார்.
அப்போது, “என்னை பொறுத்தவரையில் நீண்ட நெடுங்காலம் எங்கள் கட்சியில் இருந்தவன் நான். இன்னும் இருக்கப் போகிறவன். என்றைக்காவது ஒருநாள் மறையப் போகிறவன். மறைந்துவிட்ட அன்றைக்கு எனக்கென்று எடுக்கிற சமாதியில், ‘கோபாலபுரத்து விசுவாசி இங்கு உறங்குகிறான்’ என்று ஒரு வரி எழுதினால் போதும். என் தலைவர் கலைஞரின் கோபாலபுரத்து விசுவாசியாக வாழ்ந்தேன். இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்” என்று பேசி இருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் துரை முருகன் புகைப்படத்தை கல்லறையில் உள்ளது போன்று தவறாக சித்தரித்து சில படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட திமுக பகுதி செயலாளர் வன்னியராஜா காட்பாடி போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் இவ்வாறு அவதூறு பரப்பியது பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக ஐ.டி. விங் பிரிவைச் சேர்ந்த 20வது அணி செயலாளர் அருண்குமார் 29) என்பது தெரியவந்தது . இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“