கொடநாடு விவகாரத்தில் அரசின் நற்பெயரை கெடுக்க திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பின், கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரம் மாத இறுதியில் கொலை-கொள்ளை சம்பவம் நடைபெற்றது.
இதுதொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் பேட்டியுடன், சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்றை, பிரபல செய்தி இதழான தெஹல்காவின், முன்னாள் நிர்வாக ஆசிரியரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான, மேத்யூ சாமுவேல், டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
இவ்விவகாரம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுக்குறித்து கருத்து தெரிவித்த முக ஸ்டாலின், ”இந்த மர்மத்தை உடைத்து உண்மைகளை நாட்டுக்குச் சொல்ல வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம் கொடநாடு விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பட்டன. அப்போது பேசிய அவர், “கொடநாடு விவகாரத்தில் அரசின் நற்பெயரை கெடுக்க திட்டமிட்டு சதி செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், முதல்வருக்கு கெட்டபெயரை ஏற்படுத்த உள் நோக்கோடு சதி அரங்கேறியிருக்கிறது. கொடநாடு விவகாரம் பற்றி வெளியான தகவல்கள் அனைத்தும் கற்பனையே. கொடநாடு விவகாரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, பிரச்னை எழுப்ப காரணம் என்ன? காரணமானவர்கள் யார் என்பதை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வதந்தியை பரப்பியவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் முயற்சிக்கு யாரும் துணை போகக்கூடாது”எனவும் கூறினார்.