எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இல்லாத நிலையில், அந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கிறார். இருவரும் இருந்த போது, இப்படி பேசியிருந்தால், ரஜினியால் நடமாடியிருக்க முடியுமா? என ரஜினிகாந்தை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், அதிமுக உருவாக கருணாநிதி காரணமாக இருந்தார் என்றும், அதிமுகவின் ஆண்டு விழாவில் அண்ணா, எம்ஜிஆரின் புகைப்படத்தோடு கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மேலும் கருணாநிதிக்கு இறுதி மரியாதை செலுத்த முதலமைச்சர் வராததையும் விமர்சித்தார்.
இந்நிலையில், ரஜினியின் பேச்சை விமர்சித்து அமைச்சர் ஜெயக்குமார் இன்று பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில், "நினைவேந்தல் நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது ஆரோக்கியமில்லை. கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி பேசியது, அவருக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை என்பது காட்டுகிறது. அவருக்கு அரசியல் வரலாறு தெரியாது. தமிழக அரசியலில் என்ன நடந்தது என்பது அவருக்கு தெரியாது. ஷூட்டிங்கும், மீட்டிங்கும் ஒன்றாகிவிடாது.
பகுதி நேர அரசியல்வாதியிலிருந்து முழுநேர அரசியல்வாதியாக மாற நினைவேந்தல் நிகழ்ச்சியை பயன்படுத்திக் கொண்டுள்ளார். திமுக தொண்டர்களை தன் பக்கம் இழுக்க, அதிமுகவை விமர்சித்துள்ளார்.
எம்ஜிஆர், ஜெயலலிதா புகழுக்கு பங்கம் ஏற்படும் வகையில் பேசக்கூடாது. சந்தர்ப்பவாத அரசியல் எடுபடாது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இல்லாத நிலையில், அந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கிறார். இருவரும் இருந்த போது, இப்படி பேசியிருந்தால், ரஜினியால் நடமாடியிருக்க முடியுமா? அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல், காந்தி மண்டபத்தில் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கப்பட்டது" என்று தெரிவித்தார்.