இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று இரவு
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுக்கோட்டையில் ஏறி சென்னை நோக்கிப் பயணம் செய்தார்.
அமைச்சர் மெய்யநாதன் நேற்று புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதையடுத்து இரவு ரயிலில் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டியில் சென்னை திருப்பினார். ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2 மணியளவில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த அழுத்தம் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரது உதவியாளர்கள் சிதம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சிதம்பரம் ரயில் நிலையத்தில் இறங்கி, அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் உடனடியாக அமைச்சருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் அமைச்சரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து அமைச்சர் சென்னை அழைத்து செல்லப்படுகிறார். தனி கார் மூலம் மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னை அழைத்து செல்லப்படுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil