மதுரை ஒத்தக்கடையில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் அலிம்கோ நிறுவனம் மூலம் உதவி உபகரணங்கள் வழங்கும் விழாவில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பயனாளர்களுக்கு உபகரணங்களை வழங்கிய அமைச்சர் மூர்த்தி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் நூறு சதவிகிதம் அவர்களுக்கு கிடைக்கும் வகையில் முகாம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
போலி பத்திர பதிவுகளை ரத்து செய்யும் சட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரி திட்டம். இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலங்களில் போலி பதிவுகள் குறித்து புகார் அளித்தால் அதை ரத்து செய்வதற்குண்டான பணிகள் உடனே மேற்கொள்ளப்படும். இதுவரை பதியப்பட்ட போலி பதிவுகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படும். இனி போலி பதிவுகளை மேற்கொண்டால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மேலும், நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் நடத்தப்பட்ட வணிக வரித்துறை சோதனை குறித்த கேள்விக்கு,"வணிக வரியை முறையாக செலுத்தாக நபர்களிடம் சோதனை நடத்த கூடிய உரிமை வணிக வைத்துறை அதிகாரிகளுக்கு உண்டு. அதில் எந்த வேறுபாடும், ஏற்றத்தாழ்வும் இல்லாமல் சோதனை நடத்துகிறார்கள். அரசுக்கு வருவாய் செலுத்தாமல் ஏமாற்றும் நபர்களை கண்டறிந்து அவர்களை வரி செலுத்த வைக்கும் நோக்கில் தான் இம்மாதிரி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. யாரையும் பழி வாங்கும் நோக்கம் இல்லை.
நடப்பு நிதியாண்டில் தற்போது வரை மட்டும் வணிக வரித்துறையில் 66 ஆயிரம் கோடியும், பதிவுத்துறையில் 8 ஆயிரம் கோடியும் என மொத்தம் 74 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் வந்துள்ளது. இந்த நிதியாண்டுக்குள் இரண்டு துறைகளும் சேர்த்து மொத்தம் 1.50 லட்சம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயித்து உள்ளோம்" என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.