உட்கட்சி பூசலை ஆளுநரிடம் சொல்லி, எப்படியாவது சரிசெய்ய வேண்டும் என்று எண்ணிதான் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநரை சந்த்திதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, புதன்கிழமை ஆளுநர் ஆர்.என்.ரவியை, ராஜ்பவனில் சந்தித்து பேசினார். அவருடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோரும் ஆளுநரை சந்தித்தனர்.
ஆளுநருடனான சந்திப்பிற்குப் பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசிய இபிஎஸ்: தமிழகத்தில் நடைபெறும் மோசமான சம்பவங்களை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். திமுக அரசு அமைந்த 18 மாத காலத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள்தான் நடைபெற்று வருகிறது. ஆளுநரின் செயல்பாடு நன்றாக உள்ளது. ஆளுநர் தான் திமுகவை தட்டி கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், இபிஎஸ் ஆளுநரை சந்திக்க போனது உட்கட்சி பூசலை சரிசெய்யத்தான் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், வேம்பி ஊராட்சியில் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் நலத்திட்டங்களை வழங்கும் அரசு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இபிஎஸ் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்; அவர் எல்லாம் சொல்லுவார். துப்பாக்கிச்சூட்டையே டி.வியில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர் அவர். அவர் ஆளுநரைப் பார்க்க போனதே இதற்கு அல்ல. அவங்க கட்சிக்குள்ள அடிச்சிக்கிறாங்களே அதை எப்படியாவது ஆளுநரிடம் சொல்லி, உள்துறை அமைச்சரிடம் கூறி சரி பண்ண முடியுமா என்பதற்காகத்தான்.
அவங்க ஆளுநரைப் பார்க்க போன காரணம் வேற, வெளியில வந்து பேட்டி கொடுத்தது வேற என்றார்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 6,000 ஹெக்டேர் நிலங்களைக் கண்டறிந்து, தரிசு நிலமா என்று ஆய்வு செய்து, பயிர் செய்வதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம். தி.மு.கதான் விவசாயிகளின் நலனைக் கருதி செயல்படும் அரசு என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“