ரேஷன் கார்டு பிரிவை மாற்றம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் உரிய விசாரணை நடத்தி ரேஷன் கார்டு பிரிவை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, திமுக தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் ஆட்சி அமைந்துள்ளது. அதனால், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம், தமிழ்நாட்டில் பயன்பாட்டில் உள்ள 5 PHH, PHH-AAY, NPHH, NPHH-S, NPHH-NC ஆகிய 5 வகையான ரேஷன் கார்டுகளில் PHH, PHH-AAY, NPHH ஆகிய 3 வகையான ரேஷன் அட்டைகளில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், பலரும் தங்களின் ரேஷன் அட்டைகளின் பிரிவை மாற்றி வருகிறார்கள்.
மேலும், இதில் PHH என்ற குறியீடு இருந்தால் ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். PHH- AAY என இருந்தால் 35 கிலோ அரிசி உள்பட அனைத்துப் பொருட்களையும் வாங்கிக்கொள்ளலாம். NPHH என குறிப்பிடப்பட்டிருந்தால் அரிசி உள்பட அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம். NPHH-S என்று குறிப்பிடப்பட்டிருந்தால் அரிசியை தவிர்த்து சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். NPHH-NC என இருந்தால் ரேஷன் கடைகளில் எந்தப் பொருட்களும் தரப்படமாட்டாது. ரேஷன் அட்டையை ஒரு அடையாள அட்டையாகவும் முகவரிச் சான்றிதழாகவும் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளமுடியும். அதனால், அனைத்து ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும் சிலர் ரேஷன் அட்டையின் பிரிவை மாற்ற ஆன்லைனில் விண்ணப்பித்து வருகிறார்கள்.
இந்த நிலையில்தான், ரேஷன் கார்டு பிரிவை மாற்றம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் உரிய விசாரணை நடத்தி ரேஷன் கார்டு பிரிவு மாற்றம் செய்யப்படும் என்று உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் புதிய குடும்ப அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (ஜூலை 5) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பயனாளிகளுக்கு புதிய ரேஷன் அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் பேசியதாவது: “திண்டுக்கல் மாவட்டத்தில் 3100 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக 110 பேருக்கு தற்போது குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது. பொதுவிநியோகத் திட்டத்தை முழுவதும் கணினிமயமாக்குதல், பல துறைகள் மூலம் நடத்தப்படும் நியாய விலைக்கடைகளை ஒரே துறையின் கீழ் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது” என்று கூறினார்.
இதையடுத்து, உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி பேசியதாவது: “தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் அனைத்து தகுதியான நபர்களுக்கும் 15 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என்று கூறினார். இந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதை நிறைவேற்றும்விதமாக புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்த நபர்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுவருகிறது” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆர்.சக்கரபாணி, “குடும்ப அட்டைகளில் புதிய குடும்ப உறுப்பினர் பெயர் சேர்க்கை மற்றும் நீக்கம், முகவரி மாற்றம், குடும்ப அட்டை நகல் பெறுதல் ஆகியற்றிற்கு இணையவழியாக மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. அதோடு ரேஷன் கார்டு பிரிவு மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்தால் அதைப் பற்றி அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு குடும்ப அட்டையின் பிரிவு மாற்றம் செய்யப்படும்” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.