திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
மதுவிலக்கு அமல்படுத்துவதை 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையாக பாமக முன்னெடுத்தது. பாமக முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ், 'முதல்வரானால், எனது முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு தான்' என்றார். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்தது.
மேலும் படிக்க - Election 2019 Live Updates, தமிழக தேர்தல் களம் லைவ் அப்டேட்ஸ்
அதே தேர்தலில், படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தினார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. சொன்னது போல், ஆட்சிக்கு வந்தவுடன் நெடுஞ்சாலைகளில் இருந்த சில மதுக்கடைகளை மூட உத்தரவிட்டார். அதிமுக் ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில், அவர்கள் நிர்ணயித்தபடி மதுக்கடைகளை மூடினார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
அதேசமயம், முற்றிலும் மதுவிலக்கை அமல்படுத்த முடியுமா? என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
இந்நிலையில், ராஜபாளையம் அருகே ஆசிலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "திடீரென குடியை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்பதால் மதுவிலக்கை உடனே அமல்படுத்த முடியாது. அப்படி திடீரென்று குடியை நிறுத்தச் சொன்னால், எப்படி ஒருவரால் அதை நிறுத்த முடியும்?. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு இருக்கிறது. குடிப்பவர்களின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு படிப்படியாக மதுவிலக்கு கொண்டுவரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.