திராவிடர் கழக நிறுவனர் தந்தை பெரியாரின் 49ஆவது நினைவு தினத்தையொட்டி, காந்திபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கடந்த அதிமுக ஆட்சியில் இழந்த பெருமைகளை மீட்டெடுத்து இன்று ஒரு சிறந்த ஆட்சியை முதல்வர் வழி நடத்தி வருகிறார்.
ஒன்னரை ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதி நிலைமைகளை சரி செய்து 85 விழுக்காடு வாக்குறுதிகளை முழுவதுமாக பூர்த்தி செய்துவிட்டார்.
இன்னும் வரக்கூடிய ஆண்டுகளில் கோவை மண்ணிற்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளோடு கூடுதலாக திட்டங்களை நிறைவேற்றுவார்.
விமான நிலைய விரிவாக்கம் ஒன்னரை ஆண்டுகளில் ரூ.1084 கோடி செலவிடப்பட்டு நிலங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு ஒரு மாதங்களில் பணிகள் நிறைவு செய்யப்பட்டு விமான பணிகள் தொடங்க உள்ளன. மேம்பால பணிகள் சாலை பணிகள் குடிநீர் திட்ட பணிகள் முன்னுரிமை கொடுத்து நிதிகளை முதல்வர் வழங்குகிறார்.
கோவை மாநகராட்சியில் 114 கிலோ மீட்டர் மண் சாலைகள் உள்ளது. அதிமுக ஆட்சியில் தார் சாலைகளாக மாற்றி இருக்கலாம் .ஆனால் அவர்கள் செய்யவில்லை. பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட சாலைகளையும் சரி செய்யப்படவில்லை.
ஒரு சாலை அமைப்பது ஐந்து ஆண்டு ஆயுட்காலம். கோவை மாநகராட்சி பகுதியில் எந்தவிதமான சாலை பகுதியும் கடந்த ஆட்சியில் நடைபெறவில்லை.
தற்போது புதிய சாலைகளை அமைக்க நிதி கொடுத்து திட்டங்கள் துவங்கப்பட்டு வருகின்றன.
211 கோடி அளவில் சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டு, கூடுதலாக 19 கோடி ரூபாய் சிறப்பு நிதியை முதல்வர் விடுவித்துள்ளார். மீதமுள்ள நிதி மார்ச் மாதத்தில் 200 கோடியும் விடுவிக்கப்பட்டு விடுபட்ட சாலைகள் புனரமைக்கப்படும்.
தனியார் பள்ளிகளில் மாணவர் குறிப்பேட்டில் சாதி குறிப்பிடுவதற்கு கல்வி அமைச்சரின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். பாஜக தமிழகத்தில் எங்கு உள்ளது. எத்தனை பேர் உள்ளனர். எத்தனை வாக்குச்சாவடிகள் உள்ளது என்பது தெரியாத கட்சி பாஜக.
345 ரூபாய் மதிப்புள்ள காது கேளாதோர் கருவியை கொடுத்துவிட்டு பத்தாயிரம் ரூபாய் என பொய் சொல்லக்கூடியவர்கள் பாஜகவினர். 37 வயதில் 20,000 புத்தகங்கள் படித்துள்ளனர் என பொய் சொல்கின்றனர்.பெட்ரோல் டீசல் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது. கேஸ் சிலிண்டர் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது சாமானிய மக்களின் நிலைமை என்ன .?அது குறித்த கருத்தை அவர்களிடம் கேளுங்கள்.
கேஸ் மானியம் எத்தனை பேருக்கு வருகிறது என்று கேள்வி எழுப்பினார். ஒரு பைசா கூட வரவில்லை ஜீரோ. இப்படிப்பட்ட சூழலில் சிறந்த ஆட்சி நடத்தும் தமிழகத்திற்கு களங்கம் விளைவிக்க கூடிய வகையில் சமூக வலைதளத்தை பாஜகவினர் பயன்படுத்துகின்றனர் ஊடகங்களும் துணை போகும் சூழல் உள்ளது.
சொல்லக்கூடிய கருத்துக்கள் சரியா தவறா என தெரிந்து பின்னர் செய்தி வெளியிடுங்கள். நடந்து முடிந்த நகர்ப்புற தேர்தலில் கோவை மாநகராட்சியில் எத்தனை வார்டில் பாஜக ஜெயித்தது. பாஜகவுக்கு எவ்வளவு ஓட்டு வங்கி முதலில் உள்ளது, எவ்வளவு உறுப்பினர் என்பதை கேட்டு சொல்லுங்கள். அதை வைத்து ஒப்பிட்டு பார்க்கலாம்.
234 தொகுதியின் தனது தொகுதியாக நினைத்து கோவை மாவட்ட வளர்ச்சிக்கு சிறப்பு திட்டங்களை முதல்வர் வழங்கி வருகிறார்.
நாளை முதல்வர் நல்லாசியோடு விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி விழா பேருரை ஆற்றுகிறார்.
நேரு விளையாட்டு மைதானத்தில் அடிக்கல் நாட்டுகிறார். பின்னர் துறை சார்ந்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. பின்னர் நலத்திட்ட உதவி நடைபெறும்.
திட்டங்களை பெறும் மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது.
சிங்காநல்லூர் எஸ். ஐ .எச் .எஸ்., காலனி பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்திற்கு 29 கோடி நிதியை ஒன்னரை ஆண்டுகளில் முதல்வர் வழங்கியுள்ளார். விரைவில் பாலப்பணி கொண்டுவரப்படும். கடந்த அதிமுக ஆட்சியில் இந்தப் பாலத்திற்கு நிதி ஒதுக்கவில்லை எனத் தெரிவித்தார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.