திருவாரூர் மாவட்டம், லட்சுமாங்குடியைச் சார்ந்த முத்துக்குமரன் என்பவர், குவைத் நாட்டில் பணிபுரியும் இடத்தில் இறந்தார். அவரது உடல் தமிழக அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு, திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களிடம் பேசுகையில், "வேலை நிமித்தமாக முத்துக்குமரன் வெளிநாடு சென்று அங்கு உயிரிழந்திருப்பது எங்களுக்கு வேதனை அளிக்கிறது. அயலக தமிழர்களுக்கான துறை இருக்கிறது. வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் அங்கு முறைப்படி பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த துறை உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதை பற்றி விழிப்புணர்வு வேண்டும்.
கடந்த ஆண்டில் 152 பேரும், இந்த ஆண்டு 116 பேரும் உயிரிழந்தனர். அதே போல் வெளிநாடு சென்றவர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என கடந்த ஆண்டு 315 பேரும், இந்த ஆண்டு 311 பேரும் கோரிக்கை வைத்தனர். அவர்களை நாங்கள் அழைத்து வந்துள்ளோம். இந்த துறையின் மூலமாக 181 பேரை குறுகிய கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாட்டிற்கு பணிக்காக அனுப்பி வைத்துள்ளோம். இங்கிலாந்தில் இருந்து செவிலியர் பணிக்காக 500 பேர் கேட்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் 481 பேர் பதிவு செய்து வேலைக்கு செல்ல தயாராக உள்ளனர்" என்று தெரிவித்தார்.
கிராமங்களில் உள்ள நிலங்கள் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என்கிற சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "சர்வே எண் விடுபட்டு கிராமத்தில் பெயர் மட்டும் போடப்பட்டு இருப்பதால் பல இடங்களில் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மீண்டும் மறு அளவீடு செய்வதற்கு வக்பு வாரியத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் முறையாக பதிவு செய்துவிட்டு செல்வது மிக முக்கியமான ஒன்று இது குறித்த விழிப்புணர்வு நமக்கு கட்டாயம் தேவை" எனத் தெரிவித்தார்.
செய்தி க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“