திமுக சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் லாரி அனுப்பி வைக்கப்பட்டது. இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் நடுத்தெருவில் நிற்கின்றனர். எதிர்க்கட்சிகள் கொடுத்த அழுத்தங்களால் புயல் அடித்து ஐந்து நாட்கள் கழித்து இப்போது ஹெலிகாப்டரில் சென்றிருக்கிறார். அதுவும், கட்சிக்காரர்கள் புடைசூழ, போலீசார் அணிவகுக்க, எங்கே முதல்வர்? எங்கே முதல்வர்? என்று தேடும் அளவிற்கு, கண்ணுக்கே தெரியாதபடி சென்று, பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் பார்வையிட்டுருக்கிறார்.
அங்கே, செட்டப் செய்துவைத்திருந்த ஆளுங்கட்சியினருக்கு புயல் நிவாரண உதவிகள் செய்துவிட்டு திரும்பி வந்துவிட்டார்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் பழனிசாமி சென்று சந்திக்க மறுப்பது ஏன்?
புயலால் பாதிக்கப்பட்டு மக்கள் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில், சேலம் அரசு விழாவில் கலந்து கொண்டது ஏன்?
புயல் சேதார பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்த பிறகு தான் நிதி அறிக்கையை வெளியிட வேண்டும். ஆனாலும் முதல்வர் முழுமையாக ஆய்வு செய்யாமலேயே 1000 கோடி நிவாரண நிதியை அறிவித்து இருக்கிறார்.
புயலால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்கள் கோபப்படத்தான் செய்வார்கள். சிறப்பாக வேலை செய்தால், மக்கள் ஏன் கோபப்படப் போகிறார்கள்?
நேரடியாக மக்களை சென்று சந்தித்தால் தான் பாதிப்பை முழுமையான அறிய முடியும். ஹெலிகாப்டரில் சென்று ஒன்றும் தெரிந்து கொள்ள முடியாது" என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.