பெரம்பலூரில் நடைப்பெற்று வரும் கண்டன பொது கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் மாநில அரசையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து உள்ளார்.
பொதுக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "பாசிச பாஜக மற்றும் ஊழல் அதிமுக அரசுகளை வீழ்த்த இதோ பெரம்பலூரில் ஒரு ஜனநாயக போர். அரசியல் சட்ட அமைப்பே தெரியாதவர் தான் நமது பிரதமர் நரேந்திர மோடி. கிரிமினல் கேபினெட் தான் தமிழகத்தில் ஆட்சியில் இருக்கிறது. இந்த ஆட்சியர்கள் மிக்சர் தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரே நாளில் பணமதிப்பிழப்பை கொண்டு வந்தார் மோடி. கருப்பு பணம் ஒழியும், தீவிரவாதம் ஒழியும் மோடி மஸ்தான் வித்தைக் காட்டினார் பிரதமர் மோடி. ஆனால், நடந்து என்ன?
கடந்த தேர்தலின் போது, வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணம் மீட்கப்பட்டு, ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் போடப்படும் என்றார். ஆனால், உங்கள் அக்கவுண்ட்டில் 15 ரூபாயாவது போட்டாரா? அப்படி 15 ரூபாய் வந்திருந்தால் கூட, நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
எந்த தேர்தல் வந்தாலும், அதனை சந்திக்க தயார் என்பதை காட்டுவதற்காகவே இந்த பொதுக் கூட்டம்.
பாசிச பாஜக ஆட்சிக்கும், ஊழல் நிறைந்த அதிமுக ஆட்சிக்கும் எதிரான போர் நம்முடையது. அந்த போருக்கு பெரம்பலூர் ஒரு தொடக்கமாக இருக்கட்டும். காங்கிரஸ் ஆட்சியின் போது ஆதார் அட்டை வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து விட்டு, தற்போது உங்கள் ஆட்சியில் அதே ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தி உள்ளீர்கள்.
எதற்கெடுத்தாலும் வெளிநாடு சென்று வரும் மோடி, யார் பணத்தில் சென்று வருகிறார்? அவை அனைத்தும் மக்கள் வரிப்பணம். அது என்ன உங்க அப்பன் வீட்டு பணமா?
மோடி ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்கான முன்னோட்டம் தான் இது. ஒரே நாளில் ஜிஎஸ்டி- யை இரவோடு இரவாக கொண்டு வந்தீர்களே, இதற்கு பின் நடக்கும் ஊழல் என்னவென்று தெரியும். எதையும் ஆதாரத்தோடு தான் நான் பேசுவேன். ஏனென்றால் நான் கலைஞரோட பையன் ஆச்சே!" என்று ஸ்டாலின் உரையாற்றினார்.