கர்ப்பிணி பெண் உஷா மரணம், தமிழகத்தில் போலீஸ் அராஜகத்தின் இன்னொரு சாட்சி ஆகியிருக்கிறது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் நேற்று (மார்ச் 7) தனது கணவர் தர்மராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார் உஷா. தர்மராஜா ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டினார் என்கிற குற்றத்திற்காக அடுத்தடுத்து 3 முறை மோட்டார் சைக்கிளை எட்டி உதைத்திருக்கிறார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ்.
உஷாவும், தர்மராஜாவும் இதில் கீழே விழுந்தனர். பலத்த காயமடைந்த உஷா சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
உஷா மரணத்திற்கு காரணமான காவல் ஆய்வாளர் காமராஜ் மீது கொலை செய்யும் நோக்கில் விபத்து ஏற்படுத்தினார் என வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவரை பணியிடை நீக்கம் செய்திருக்கிறது அரசு.
இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருவெறும்பூரில் ஹெல்மெட் அணியாததால் காவல் ஆய்வாளர் எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியடைந்தேன். மனிதநேயமற்ற இச்செயல் வேதனையளிப்பதோடு, இதனைக் கண்டித்து அமைதியாக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தியது கடும் கண்டனத்திற்குரியது" என்று குறிப்பிட்டுள்ளார்.