mk stalin meets subhasri family : சென்னையில் பேனர் விபத்தால் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினரை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். சுபஸ்ரீ இல்லத்திற்கு இன்று காலை சென்ற ஸ்டாலின் அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து திமுக சார்பில் சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிதியுதவியையும் அறிவித்தார்.
கடந்த வாரம், சென்னை பள்ளிக்கரணையில் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவுக்காக வைக்கப்பட்ட பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். சுபஸ்ரீ-யின் இறப்பு தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.தமிழகத்தில் இனி பேனர் கலாச்சாரமே வேண்டாம் என்று அரசியல் தலைவர்கள்,நடிகர்கள் கோரிக்கைகளை வைத்தனர். கட்சி தலைவர்கள் தொண்டர்களுக்கு பேனர் தொடர்பாக அறிக்கையும் வெளியிட்டனர்.
அதனைத்தொடர்ந்து, சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆறுதல்கள் கூறப்பட்டு வருகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், விசிக தலைவர் தொ.திருமாவளவன் ஆகியோர் சுபஸ்ரீ குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர். அந்த வகையில் இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுபஸ்ரீ வீட்டுக்கு சென்று சுபஸ்ரீ பெற்றோரிடம் ஆறுதல் தெரிவித்தார்.
மொத்த குடும்பத்திற்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார். ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு எம்.பி., தாமோ அன்பரசன் உள்ளிட்டோரும் உடன் சென்றிருந்தனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “ நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி அவர்கள் பேனர்கள் வைக்கின்றனர். ஏற்கெனவே கோவை மாவட்டத்தில் ரகு இன்ற இளைஞனின் உயிர் போனது. இப்போது சுபஸ்ரீ உயிரிழந்தது வேதனையை அளிக்கிறது. அவரின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறேன். என்னதான் நாங்கள் ஆறுதல் கூறினாலும் அவர்களுடைய மனது ஆறுதல் அடையாது என எங்களுக்குத் தெரியும். இருந்தாலும், முடிந்தவரையில் நாங்கள் ஆறுதல்படுத்தியிருக்கிறோம்.
பேனர் கலாச்சாரத்தால் உயிரிழந்தது சுபஸ்ரீயுடன் முடியட்டும். திமுக சார்பில் சுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கியிருக்கிறோம். உதவித்தொகை வழங்கினாலும், அந்த குடும்பம் பல இன்னல்களுக்கு ஆளாகியிருக்கிறது. அந்த குடும்பத்திற்கு திமுக துணை நிற்கும்.” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.