சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். எஸ்.பி.கே நிறுவனம் உரிமையாளர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் செய்யாதுரை சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரி சோதனை குறித்து நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திடீர் சந்திப்பின் காரணம் குறித்து ஸ்டாலின் கூறினார். அதில், “இன்று ஆளுநரை சந்தித்து அண்மையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வருமான வரி சோதனை சம்மந்தமாக மனுவை திமுக சார்பில் வழங்கியிருக்கிறோம். வருமானவரி சோதனைக்கு ஆளாகியிருக்கும் நாகராஜன், செய்யாதுறை என்ற நெடுஞ்சாலை காண்டிராக்டர் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்மந்திகள் ஆவார்கள். இதற்காகவே இதுவரை 3 நிறுவனங்களுக்கு மட்டும் 3020 கோடி ரூபாய் மதிப்புள்ள காண்டிராக்ட் வழங்கப்பட்டுள்ளது. அதே போல முதல்வர் மகனின் மாமனார் சுப்புரமணியன் நெடுஞ்சாலை ஒப்பந்தம் பெற்ற காண்டிராக்டராக இருக்கிறார். கடந்த 7 வருடமாக நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருக்கும் பழனிசாமி தற்போது தமிழகத்தின் முதல்வராக உள்ளார். இதனை பயன்படுத்தி, அவர் அவருடைய உறவினர்களுக்கு காண்ரிடிராக்ட் வேலை வழங்கி வருகிறார்.
எனவே ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்திட வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து இன்று புகார் மனு அளித்திருக்கிறோம். மத்திய அரசு பல திட்டத்திற்காக பல கோடியை ஒத்துக்குகிறது. ஆனால் அந்த தொகையிலும் முதல்வர் மற்றும் பல அமைச்சர்கள் ஊழல் செய்கிறார்கள். எனவே இது குறித்து சிபிஐ விசாராணை நடத்த வேண்டும் என்று மனு அளித்துள்ளோம். இந்த மனுவை மத்திய உள்துறைக்கு அனுப்பி வைக்கிறோம் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். ஒரு வேளை ஆளுநர் நடவடிக்கை எடுக்கவிலையென்றால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்.” என்றார் ஸ்டாலின்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.