அரசு போக்குவரத்து கழகத்தில் சுமார் 1.5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு 13-வது ஊதிய ஒப்பந்தத்தை கடந்த செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் அமல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு இதுவரை அமல்படுத்தவில்லை.
இது தொடர்பாக முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தது. இதையடுத்து, 13-வது ஊதிய ஒப்பந்தம், ஓய்வுதியம், நிலுவைத் தொகை உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மே-15-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை (இன்று) தொடங்குவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதையடுத்து, நேற்று அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இறுதிகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக ஏராளமான போக்குவரத்து தொழிலாளர்கள் பேருந்துகளை பணிமனைகளில் நிறுத்தி விட்டு நேற்றே போராட்டத்தில் குதித்தனர்.
இதனால், நேற்று பயணிகள் ஏராளமானோர் பேருந்து ஏன் வரவில்லை என்ற காரணம் தெரியாமல் பரிதவித்தனர். பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை என்பதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: மக்கள் படும் அவதியை நீக்க முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.