பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாரதிய ஜனதாக் கட்சியினரை தயார்படுத்தி வருகிறார். அதன் ஒரு கட்டமாக தமிழ்நாட்டில் கட்சியின் பூத் ஏஜெண்டுகளுடன் காணொளி காட்சி மூலமாக உரையாடி வருகிறார். ஏற்கனவே கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்ட நிர்வாகிகளுடன் ஒரு நாளும், தென் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் ஒரு நாளும் இந்த உரையாடல் நடந்தது.
அடுத்தகட்டமாக அரக்கோணம், தர்மபுரி, கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் டெல்லியில் இருந்தபடி உரையாடினார்.
இந்நிலையில், இன்று(ஜன.13) மயிலாடுதுறை, பெரம்பலூர், சிவகங்கை, தேனி, விருதுநகர் பகுதி பூத் ஏஜெண்டுகளிடம் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, "எதிர்க்கட்சிகள் தங்களது சாம்ராஜ்யத்தை உருவாக்க விரும்புகிறார்கள். ஆனால், நாம் மக்களுக்கு அதிகாரம் கொடுக்க நினைக்கிறோம். மற்ற கட்சிகளைப் போல, வாக்கு வங்கிக்காக நாம் ஆட்சியை பங்குபோட அரசியல் செய்யவில்லை. அனைத்து வழிகளிலும் மக்களுக்காக சேவகம் செய்யவே நாம் களத்தில் நிற்கிறோம்.
நடைபெறவிருக்கும் தேர்தல் பாஜகவுக்கும் முக்கியமானது, நாட்டின் முன்னேற்றத்திற்கும் முக்கியமானது. ஒரு கையில் நமது முன்னேற்றத்திற்கான வழிகளையும், மறு கையில் சந்தர்ப்பவாத அரசியலையும், கூட்டணியையும் வைத்திருக்கிறோம்.
மோடி மிகவும் மோசமானவர், அரசாங்கம் செயல்படவில்லை என்றால் ஏன் இந்த மெகா எதிர் கூட்டணி உருவாகிறது? உங்கள் மீதே உங்களுக்கு நம்பிக்கை இல்லை. இது செயல்படும் அரசு என்று மக்கள் அறிவார்கள்" என்றார்.