Murugan Idli Shop's Kitchen licence suspended: சென்னையின் பல்வேறு இடங்களில் உள்ள பிரபல முருகன் இட்லிகடையின் மத்திய சமையல் அறை சுகாதாரம் இல்லாததால் உணவு பாதுகாப்புத்துறை சமையல் அறையின் உரிமத்தை ரத்து செய்துள்ளது.
பிரபல முருகன் இட்லிகடை உணவகத்துக்கு சென்னையில் பல்வேறு இடங்களில் 23 கிளைகள் உள்ளன. இந்த உணவகங்களுக்கு அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள அந்நிறுவனத்துக்கு சொந்தமான சமையல் கூடத்தில் இருந்துதான் உணவு தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இந்நிலையில், 50 நாட்களுக்கு முன்பு முருகன் இட்லிகடை உணவில் புழுக்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட புகாரின் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள முருகன் இட்லிகடைகளுக்கு உணவு தயாரிக்கும் அந்த கடைக்கு சொந்தமான சமையல் அறையை சோதனை செய்துள்ளனர். அப்போது அங்கே அவர்கள் சமையல் அறை, பாத்திரங்கள் கழுவும் இடம் சேதமடைந்திருப்பது மற்றும் சுகதாரம் தரத்தில் சில முக்கிய குறைபாடுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும், குளிர்பதனப்பெட்டி முறையாக பராமரிக்கப்படாததோடு அங்கே வேலை செய்யும் ஊழியர்களுக்கு பணியின்போது தலையில் அணிந்துகொள்ள சுத்தமான தொப்பி, கையுறைகள் வழங்கப்படவில்லை என்பதையும் அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், சமையல் அறையில் புச்சிகளைக் கட்டுப்படுத்துவதிலும் குறைபாடுகள் இருப்பதை அறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் முருகன் இட்லிகடை உணவகத்திடம் இந்த முக்கியமான சுகாதாரக் குறைபாடுகளை எல்லாம் சுட்டிக்காட்டி அவற்றை சரிசெய்ய கால அவகாசம் அளித்துள்ளனர். அவை எதுவும் அவர்கள் அளித்த காலக்கெடுவுக்குள் சரிசெய்யப்படாததால் விளக்கம் அளிக்க கோரி உணவகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால், முருகன் இட்லிகடை உணவகத்தினர் அதைப் புறக்கணித்ததோடு தொடர்ந்து அவர்கள் சுகாதாரமற்ற முறையில் தொடர்ந்து செய்துவந்துள்ளனர். இதையடுத்து, நேற்று அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள முருகன் இட்லிகடைகளுக்கு உணவு தயாரிக்கும் சமையல் அறைக்கு சென்ற உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த சமையல் அறையின் உரிமத்தை ரத்து செய்து நோட்டீஸ் ஒட்டினர்.
மேலும், அந்த உணவக நிறுவனம் சுகாதார பிரச்னைகளை சரிசெய்தபின் உரிமம் ரத்து செய்யப்பட்டதை நீக்க உணவுப் பாதுகாப்புத்துறையை அணுகலாம் என்று அறிவித்தனர்.
கடந்த வாரம் சென்னை பாரிஸ் கார்னரில் உள்ள முருகன் இட்லி கடையில் சாப்பிடச் சென்ற ஒரு வாடிக்கையாளர் உணவில் புழு இருப்பதாக உணவக மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த மேலாளர் வாடிக்கையாளருக்கு உரிய பதில் அளிக்காததால் அந்த வாடிக்கையாளர் உணவு பாதுகாப்புத்துறையின் வாட்ஸ் ஆப் புகார் எண்ணுக்கு புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் செனனி மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த உணவகத்தை ஆய்வு செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அங்கே பூச்சி கட்டுப்பாடுகள் சரியாக பராமரிக்காதது அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுகாதாரக் குறைபாடுகளை சரிசெய்யாவிட்டால் மேலும் அந்த உணவகத்தின் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத்துறை தெரிவிக்கின்றனர்.
சென்னையின் பிரபல முருகன் இட்லிகடைகளுக்கு உணவு தயாரிக்கும் சமையல் அறையில் சுகாதாரம் இல்லாததால் சமையலறையின் உரிமத்தை ரத்து செய்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.