murugesan kannagi Honor killing case : 2003ம் ஆண்டு கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் 13 பேருக்கு தண்டனை விபரங்களை கடலூர் எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்ற சிறப்பு நீதிபதி உத்தமராஜா அறிவித்து வருகிறார்.
கடலூர் மாவட்டம் புதுக்கூரைப்பேட்டையில் கடந்த 2003ம் ஆண்டு நடைபெற்ற ஆணவக் கொலை வழக்கில் உடந்தையாக இருந்த விருதாச்சலம் எஸ்.ஐ. தமிழ்மாறன், ஆய்வாளார் செல்லமுத்து ஆகியோருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பெண்ணின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி இந்த செயல் மிகவும் காட்டுமிராண்டி தனமானது. காவலர்களும் இதில் உடந்தையாக செயல்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது என்று தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் அப்பா துரைசாமி உட்பட 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விபரம்
கடலூர் மாவட்டம் விருதாச்சலம் குப்பநத்தம், புதுக்காலனி பகுதியில் வசித்து வந்த சாமிக்கண்ணுவின் மகன் முருகேசன். தலித் சமூகத்தை சேர்ந்த கெமிக்கல் எஞ்சினியர் பட்டதாரியான முருகேசன் அதே பகுதியை சேர்ந்த துரைசாமியின் மகளை காதலித்து 05.05.2003ம் ஆண்டு பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
ஜூலை 8, 2003ம் ஆண்டு உறவினர்கள் வீட்டில் இருந்து அழைத்து வரப்பட்ட அவர்கள் புதுக்கூரைப்பேட்டை சுடுகாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு, மூக்கு மற்றும் வாயில் விஷத்தை ஊற்றி கொலை செய்து சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர்.
இது தொடர்பாக முருகேசனின் உறவினர்கள் காவல்துறையினரை நடவடிக்கை எடுக்க வற்புறுத்திய போது விருதாசலம் காவல்துறை நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது. சம்பவத்தை மூடி மறைக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். நடைபெற்றது ஆணவக் கொலை என்பதால் சி.பி.ஐ.க்கு வழக்கு மாற்றப்பட வேண்டும் என்று எழுந்த வலுவான கோரிக்கைகளை தொடர்ந்து 2004ம் ஆண்டு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. அதே ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் காவல்துறை அதிகாரிகள் உட்பட 15 நபர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இந்த வழக்கு கடலூர் மாவட்டம் எஸ்.சி, எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil