பிரசாத் ஸ்டூடியோ விவகாரத்தில் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக பத்ம விபூஷண் விருதை திருப்பி அளிக்கவுள்ளதாக வரும் தகவல்களை இசையமைப்பாளர் இளையராஜா மறுத்தார்.
இதுதொடர்பாக இளையாராஜா வெளியிட்ட வீடியோ ஒன்றில், " நான் சொல்லாத ஒரு கருத்தை, ஒரு தனிப்பட்ட நபர்களுடைய கருத்தை நான் சொன்னதாக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது முற்றிலும் தவறு என சொல்லிக் கொள்கிறேன். அப்படி, ஒரு கருத்தை நான் வெளியிடவே இல்லை எனவும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.
முன்னதாக, இசையமைப்பாளர் தினா, இசையமைப்பாளர் இளையாரஜா தொடர்பான தனது கருத்துக்கள் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாக வீடியோவில் விளக்கம் அளித்தார்.
பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள இசைக்கூடத்தில் தனது இசை கருவிகள், இசை கோப்புகள், விருதுகள் உள்ளதாகவும், அவை எடுத்து செல்ல தன்னை அனுமதிக்க நிர்வாகத்திற்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.