mylapore jannal bajji kadai owner :உயிரோடு இருக்கும் மயிலாப்பூர் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் சந்திரசேகரன் இறந்து விட்டதாக வெளியான செய்திகள் தவறானது என்று தெரிய வந்துள்ளது. சந்திரசேகரின் சகோதரரும், ஜன்னல் கடையின் உதவியாளருமான சிவராமன் இறந்த தகவல் தான் தவறுதலாக சந்திசேகரன் மரணம் என பரவியுள்ளது.
சமூகவலைத்தளங்களில் அடிக்கடி பிரபலமானோர் இறந்து விட்டதாக பரவும் செய்தி வழக்கமான ஒன்று. இந்த வதந்தி சினிமா பிரபலங்களையும் விட்டு வைப்பதில்லை. பாடகி ஜானகி, எம்.எஸ் பாஸ்கர், கே.ஆர் விஜயா என பழம்பெரும் நடிகர் நடிகைகள் தொடங்கி சினிமா கலைஞர்கள் என பல பேர் இந்த வதந்திகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அந்த வகையில், சமீபத்தில் பரவிய மிகப்பெரிய வதந்தி தான் பிரபலமான மயிலாப்பூர் ஜன்னல் கடை உரிமையாளர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்து விட்டார் என பரவிய செய்தி.
ஆனால் அது உண்மையில்லை என்ற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லை “நான் உயிரோடு தான் இருக்கிறேன் இறந்தது என் சகோதரர் “ என்று ஜன்னல் கடை உரிமையாளர் சந்திரசேகரன் பிரபல நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக ஜன்னல் கடை மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. காலையில் டிபன், மாலையில் பஜ்ஜி போண்டா என கலக்கும் ஜன்னல் கடைக்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் தேடி சென்று உண்டு மகிழ்வார்கள். இந்த கடையில் உரிமையாளர் சந்திரசேகரன் ஆவார். சென்னையில் செம்ம ஃபேமஸ் ஆன ஜன்னல் கடை குறித்து தொலைக்காட்சி சேனல்கள், யூடியூப் சேனல்களில் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
சந்திரசேகரனின் இளைய சகோதரர் ஆன சிவராமகிருஷ்ணன் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய கணக்காயர் அலுவலகத்தில் பணி புரிந்து வருகிறார். இவர் பணி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் காலை மாலை வேளையில் சகோதரர் கடையில் உதவி செய்து வந்தார். இவர் தான் கடந்த 4 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக ராயப்பேட்டை மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
சிவராமகிருஷ்ணன் இறந்த செய்தி தான் ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் சந்திரசேகரன் உயிர் இழந்ததாக தவறாக பரவியது. இதை அறிந்த சந்திரசேகரன் அதிர்ச்சி அடைந்துள்ளார்.இதுக்குறித்து பிரபல நாளிதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில்,”நான் உயிர் இழக்கவில்லை, நலமாக உள்ளேன். எங்களுக்கு உறுதுணையாக இருந்த சகோதரரின் மரணம் கடும் துயரத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த தகவல் குடும்பத்தினருக்கு மேலும் சோகத்தை உண்டாக்கி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இன்னும் 1 மாதத்தில் மயிலாப்பூர் ஜன்னல் கடை திறக்கப்படும் என்றும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.