மாநகராட்சியாகிறது நாகர்கோவில்: நாகர்கோவிலில் இன்று நடைபெற்று வரும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதுடன், புதிதாகக் கட்டப்பட உள்ள கட்டிடங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுவார் என அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 15 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, "ஒகி புயலின் போது மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டது. பாதிக்கப்பட்ட மீனவர்கள், பொதுமக்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது. உலகத்தரத்திலான கல்வி தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. எல்லைகள் மறுசீரமைப்பு பணி முடிந்ததும் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்" என்று அறிவித்துள்ளார்.