மரபணு கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தை மித்ராவுக்கு ரூ.16 கோடி மருந்து செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்- பிரியதர்ஷினி தம்பதியின் இரண்டு வயது குழந்தை மித்ரா. மித்ராவுக்கு அரிய வகை மரபணு கோளாறு நோயான முதுகு தண்டுவட தசைநார் சிதைவு (ஸ்பைனல் மஸ்குலர் ஆட்ரோஃபி) எனும் நோய் பாதித்தது. குழந்தையைக் காப்பாற்ற மரபணு மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அந்த சிகிச்சைக்கு வெளிநாட்டிலிருந்து ரூ.16 கோடி மதிப்புள்ள மருந்தான ஸோல்ஜென்மா மருந்தை வரவழைக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
இதனையடுத்து, குழந்தை மித்ராவைக் காப்பாற்றுவதற்காக, அவரது பெற்றோர், அந்த மருந்தை வாங்குவதற்கு நிதியுதவி செய்ய சமூகவலைதளங்களில் வேண்டுகோள் வைத்திருந்தனர். ‘Save Mithra’ என்று மித்ராவைப் பற்றிய தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. பொதுமக்கள் பலரும் நிதியுதவி வழங்கியதோடு, மற்றவர்களையும் உதவுமாறு வலியுறுத்தியிருந்தனர்.
இவ்வாறு பல்வேறு தரப்பினர் அளித்த நிதியுதவியில், ஒரே மாதத்தில் அந்த மருந்தின் விலையான ரூ.16 கோடி திரட்டப்பட்டது. ஆனால் அந்த மருந்தை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய கிட்டத்தட்ட 35% இறக்குமதி வரி செலுத்த வேண்டியிருந்தது. இதற்கு சுமார். ரூ.5 கோடி வரை செலவாகும் நிலையில், மித்ராவின் பெற்றோர், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களும் மருந்துக்கான இறக்குமதி வரியில் விலக்கு அளிக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து மத்திய, இறக்குமதி வரிக்கு விலக்கு அளித்தது.
பின்னர், அமெரிக்காவில் மருந்து ஆர்டர் செய்யப்பட்டு, இந்தியாவிற்கு வரவழைக்கப்பட்டு, இன்று பெங்க்ளூரு பாப்டிஸ்ட் மருத்துவமனையில் குழந்தை மித்ராவுக்கு செலுத்தப்பட்டு நல்லபடியாக சிகிச்சை முடிவடைந்துள்ளது. சிகிச்சைக்கு உதவிய அனைவருக்கும் மித்ராவின் பெற்றோர் நன்றி கூறியுள்ளனர். மித்ரா இன்னும் ஒரு மாதகாலம் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளது. மித்ரா விரைவில் குணமாகி வர பொதுமக்கள் வேண்டி வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil