அதிமுக ஆதரவு நாகப்பட்டினம் எம்.எல்.ஏ.வும், மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் நாகப்பட்டிணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி. இவர் நேற்று மதுரை வந்திருந்தார். அங்குள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்தார்.
நேற்று மாலையில் விருந்தினர் மாளிகையில் உள்ள கான்பரஸ் ஹாலில் பத்திரிகையாளர்களை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார். இதையடுத்து தல்லாகுளம் போலீஸாரும், துணை கமிஷனர் வி.சசிமோகன் ஆகியோரும் அங்கு வந்து விசாரித்தனர். அவர்களையும் மீறி மாலையில் அதே வளாகத்தில் பத்திரிகையாளர்களை தமிமுன் அன்சாரி சந்தித்தார்.
அப்போது, ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, பிதமர் மோடி தாமதப்படுத்தியதாக குற்றம்சாட்டினார். மேலும் ஜார்கண்ட் மாநிலத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்பை தடை செய்ததற்கும் கண்டனம் தெரிவித்தார்.
இந்நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜசேகரன் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், ’ஊழியர்கள் தடுத்தும் உரிய அனுமதியின்றி அத்துமீறி சுற்றுலா மாளிகை கூட்ட அரங்கை பயன்படுத்தியதாகவும், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக’ சொல்லியிருந்தார். அதன்பேரில், தமிமுன் அன்சாரி எம்எல்ஏ உட்பட சிலர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.