இந்தியா முழுவதும் மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இந்த நுழைவு தேர்வைத் தமிழகத்தில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள். ஏற்கனவே தமிழகத்தின் ஒரு சில பகுதி மாணவர்களுக்குக் கேரளா எர்ணாகுளத்திஉல் மையம் ஒதுக்கப்பட்டது அவர்களுக்கு கடும் சிரமத்தை அளித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் நீட் வினாத் தாள் மொழி மாற்றி அளிக்கப்பட்டது மாணவர்களிடையே மேலும் பதற்றத்தை கூட்டியது.
காலை 10 மணிக்குத் துவங்க இருந்த நீட் தேர்வை மதுரை பகுதியின் தேர்வு மையத்தில் சுமார் 120 மாணவர்கள் எழுதக் காலை 9 மணிக்கே வந்திருந்தனர். 9 மணி முதலே தேர்வு மையத்திற்குள் நுழைந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்தது வினாத்தாள். மாணவர்கள் விண்ணப்பித்தபடி அவர்கள் கேட்ட மொழியில் வராமல் இந்தி மொழியில் வினாத்தாள் இருந்தது. இதனைக் கண்டதும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எனவே அந்த மாணவர்கள் அனைவரையும் காத்திருக்க அறிவித்தனர்.
பின்னர் அவரவர் விண்ணப்பித்த மொழியில் வினாத்தாள் எடுத்து வரப்பட்டுத் தேர்வு தொடங்க 2 மணி நேரம் தாமதமானது. இதனால் மாணவர்கள் சிலர் பதற்றத்துடன் தேர்வெழுதினர். 12.30 மணிக்குத் துவங்கிய இந்தத் தேர்வு இறுதியாக 3.30 மணிக்கு முடிந்தது.
தாமதமான இந்தத் தேர்வு முடிந்த பின்னர் மாணவர்களிடம் இருந்து வினாத்தாளையும் மைய நிர்வாகம் திரும்ப பெற்றுக்கொண்டது. மேலும் அனைத்து மாணவர்களிடமும், தேர்வை நன்றாக எழுதியதாகக் கடிதமும் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கின்றனர்.