நீட் தேர்வில் தவறாகக் கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 196 கருணை மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இ-க்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இறுதி பட்டியல் வரும் வரை மருத்துவ கலந்தாய்வு நடத்தக் கூடாது என உத்தரவு.
2018ம் ஆண்டு நீட் தேர்வு தமிழ் மொழி வினாத் தாளில் 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்தது. எனவே தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எம்.பி.ரங்கராஜன் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தார். நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழிபெயர்ப்பில் அதிக குளறுபடி இருந்ததால் தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 வினாக்களுக்கு 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பளித்தது. இதில், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒரு கேள்விக்கு தலா 4 மதிப்பெண் கணக்கில் 49 கேள்விகளுக்கு மொத்தமாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இ-க்கு உத்தரவு அளித்துள்ளது.
மேலும் கூடுதல் மதிப்பெண் வழங்கி, 2 வாரத்திற்குள் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும், அதுவரை மருத்துவ கலந்தாய்வு நடைபெறக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பினால் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பின் சேரும் நம்பிக்கை அதிகரித்துள்ளது.