நெல்லை மாவட்டம் டக்கம்மாள்புரம் அருகே சுற்றுலா பேருந்தும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் தெனாலி பகுதியைச் சேர்ந்த சுமார் 43 பேர் தனியார் பேருந்தில் தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ளனர். அவர்கள் பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்துவிட்டு, பின்னர் கன்னியாகுமாரி செல்வதற்காக சென்றுள்ளனர். இந்த நிலையில், நெல்லை மாவட்டம் டக்கம்மாள்புரம் அருகே நான்கு வழிச்சாலையில் அதிகலை பேருந்து நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, திண்டுக்கல்லில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சிமெண்ட் ஏற்றி வந்த லாரி வந்த வேகத்தில் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோரவிபத்தில் பேருந்தில் வந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 பேர் படுகாயம் அடைந்ததனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை செய்ததில், அவர் தூக்க கலக்கத்தில் லாரி ஓட்டியது தெரியவந்தது. விபத்து குறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.