காஞ்சிபுரம் பகுதி அருகே உள்ள வண்டலூரில் கடந்த சில மாதங்களாகப் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. தென்மாவட்டங்களிலிருந்துவரும் பேருந்துகள் அனைத்தும் சென்னைக் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் செல்கின்றன. இதனால் வண்டலூர் மற்றும் பெருங்குலத்தூர் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே இதற்கு ஒரு தீர்வு கொண்டு வருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
பொதுமக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று வண்டலூர் கிளாம்பாக்கம் பகுதியில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான இடத்தைத் தேர்வு செய்த நிலையில் இன்று அதன் ஆய்வுப் பணிகளை துணை முதல்வர் பன்னீர்செல்வம் செய்கிறார்.
மேலும் இந்தப் பேருந்து நிலையத்தின் கட்டுமான திட்டத்தின் வரைபடத்தை அதிகாரிகள் துணை முதல்வருக்கு விளக்கினர். சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்குச் செல்ல கோயம்பேடு பேருந்து நிலையம் மட்டுமே தற்போது உள்ளது. இதனிடையே புதிய பேருந்து நிலையம் கட்டி முடித்தபின் வண்டலூரில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.