சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆகியவற்றுக்கு மொத்தம் 75 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளது. அதில் தற்போது 54 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 21 நீதிபதி பணியிடங்கள் காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த காலி பணியிடத்தை நிரப்பும் வகையில் கடந்த ஆண்டு அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல் தலைமையிலான நீதிபதிகள் கோலிஜியம் 11 மாவட்ட நீதிபதிகளின் பெயர்களை உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்தார். அதன்படி உச்ச நீதிமன்றம் இந்த பெயர் பட்டியலில் இருந்து 6 பேரை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கோலிஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
இதன்படி மாவட்ட நீதிபதிகள் பணியிடத்தில் இருந்து வரும் ஆறு பேர் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்து மத்திய சட்டத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருமதி.எஸ். ரமாதிலகம், ( Smt. S. Ramathilagam) திருமதி ஆர். தரணி (Smt.R. Tharani), திரு. ஆர். ராஜமாணிக்கம் (Shri.P. Rajamanickam), திருமதி டி. கிருஷ்ணவள்ளி (Smt.T.Krishnavalli), பொங்கியப்பன் (Shri.R. Pongiappan), திருமதி ஹோமலதா (Smt. R. Hemalatha) ஆகிய ஆறு பேரை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்தது. புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் உள்ள கூடுதல் நூலக கட்டடத்தில் நடைபெறும் விழாவில் பதவிப்பிரமானம் செய்து வைக்கிறார்.
இவர்கள் 6 பேரும் நீதிபதியாக பதவியேற்க உள்ளதை அடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயரும். இதனையடுத்து பெண் நீதிபதிகள் எண்ணிக்கை 11 ஆக உயருகின்றது. இன்னும் 15 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.