புத்தாண்டு தினம் அன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு என்றாலே நவநாகரீக இளசுகளுக்கு கொண்டாட்டம்தான். டிசம்பர் 31-ம் தேதி இரவு தொடங்கி விடியவிடிய நண்பர்களுடன் கொண்டாட்டங்கள் களைகட்டும். சென்னை இளைஞர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், பெரும்பாலும் கிழக்குக் கடற்கரைச் சாலையில்தான் இருக்கும். மின்னல் வேகத்தில் பைக் ரேஸ், ஒரு பைக்கில் 4 பேர் செல்வது, மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது, சாலைகளில் பாட்டில்களை உடைப்பது, கண்ணில் தென்படும் பெண்களைக் கட்டிப்பிடித்து வாழ்த்துச் சொல்வது போன்ற சம்பவங்கள் அரங்கேறும். ரிசார்ட்டுகளில் கேளிக்கை நிகழ்ச்சிகள், மது விருந்துகள் என இரவு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெறும். அந்த நாளில் காவல்துறையினருக்குப் பாதுகாப்புப் பணி என்பது சவால் நிறைந்ததாகவே இருக்கும்.
இந்த நிலையில், புத்தாண்டு தினத்தன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்தால் பாஸ்போர்ட் சரிபார்ப்பின் போது சிரமம் ஏற்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை, துரைப்பாக்கம் பகுதிகளில் பைக் ரேஸ் தடுப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மெரினா, சாந்தோம் , எலியட்ஸ், நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் மக்கள் கூட்டத்தை கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரையோரங்களில் குதிரைப்படைகள் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ள காவல்துறை, பைக் ரேஸில் ஈடுபடுவோர்களை தடுக்க 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளில் 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க - 2019 புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர ஹோட்டல்களுக்கு போலீசார் புதிய கட்டுப்பாடு