இலங்கையைச் சேர்ந்த விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட இந்த பயங்கரவாத அமைப்பில் தொடர்பில் இருப்பதாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளன. அந்தவகையில் தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், முக்கிய தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு, சட்டவிரோதமாக துப்பாக்கிகள், வெடிமருந்துகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டதாக 2 பேர் மீது சேலம் ஓமலூர் காவல் நிலையத்தில் மே 19 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கப்பட்டு என்.ஐ.ஏ ஜூலை 25ஆம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்தநிலையில் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் தமிழ்நாட்டின் சேலம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் முக்கிய ஆவணங்கள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேசிய புலனாய்வு முகமை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "சேலம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சி.டி, டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள், அமைப்பு தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களின் படங்கள், முக்கிய ஆவணங்கள், சட்டவிரோத துப்பாக்கிகள், வெடிமருந்துகள் தயாரிக்க வாங்கிய பொருட்களின் பில், விஷம் தயாரிக்க பயன்படுத்தும் விதை, காடுகளில் உயிர்வாழ பயன்படுத்தும் பொருட்கள் உள்ளிட்டவைகள் சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டன" எனத் தெரிவித்தார்.
இந்த வழக்கு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“