Nilgiris News : ஞாயிற்று கிழமை அன்று நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், கொலப்பள்ளி அருகே காட்டு யானை தாக்கியதால் தந்தை மற்றும் மகன் உயிரிழந்தனர். கொலப்பள்ளி யூனியன் திமுக கவுன்சிலராக பணியாற்றியவர் ஆனந்த ராஜ் (49), அவருடைய மகன் ப்ரசாத் (29) இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது யானை தாக்கியதில் உயிரிழந்தனர். டிசம்பர் 11ம் தேதி அன்று சேரன்கோடு பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் யானை தாக்குதலால் உயிரிழந்தார்.
இந்நிலையில் அந்த காட்டுயானை பிடிக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பொம்மன் மற்றும் வாசிம் கும்கி யானைகள் சம்பவ இடத்திற்கு அழைத்துவரப்பட்டன. அதே போன்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கலீம் யானையும் வரவழைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : மசினகுடி வலசை பாதை : யானைகளுக்கு இருக்கும் அங்கீகாரமும் உரிமையும் மனிதர்களுக்கு இல்லையா?
30க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சேரங்கோடு பகுதியில் கூடாரம் அமைத்து யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சேரங்கோடு, சேரம்பாடி, கொலப்பள்ளி தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு காடுகளை ஒட்டி அமைந்திருப்பதால் அடிக்கடி யானைகள் ஊருக்குள் வரும் நிகழ்வு நடைபெற்று வருவது குறித்து உள்ளூர் மக்கள் ஏற்கனவே புகார் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை மற்றும் மகன் உயிரிழந்த நிலையில், போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை வனத்துறை மேற்கொள்ளவில்லை என்று கூறி பந்தலூரில் கடையடைப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பதவி மற்றும் இழப்பீடாக ரூ. 25 லட்சம் தர வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். மேலும் சாலைகளின் இரு புறங்களிலும் அமைந்திருக்கும் புதர்களை வெட்டி, போதுமான தெருவிளக்குகள் பொருத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கையை எழுப்பினர்.
மேலும் படிக்க : இயற்கை விவசாயத்திற்கு மாறும் நீலகிரி; புதிய செயலி அறிமுகம் !
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil