முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இந்த கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க போவதில்லை என டிடிவி தரப்பினர் தெரிவித்திருந்தனர். அதன்படி, டிடிவி ஆதரவு எம்எல்ஏ-க்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனர். அதில், "ஜெயலலிதாவின் ஆட்சியை ஒற்றுமையுடன் பாதுகாப்போம். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மனப்பூர்வமாக முழு ஆதரவு தருவோம்" என்ற இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், இந்த கூட்டத்தில் எம்எல்ஏ-க்கள் 111 பேர் கலந்து கொண்டதாகவும், அவர்கள் அனைவரும் தீர்மானத்தில் கையெழுத்திட்டு உள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறுகையில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பின் பேரில் 111 எம்.எல்.ஏ.க்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு வருகைப்பதிவில் கையெழுத்திட்டனர். முதல்வர் மீது முழுமையான நம்பிக்கையும், அவர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் சட்டமன்றம் உறுப்பினர்கள் தெரிவித்தனர். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மட்டும் உடல்நலக்குறைவால் வரவில்லை. ஆனால், அவர் தொலைபேசியில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அதேசமயம், புதுச்சேரி ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு தருவோம். அம்மாவின் அரசுக்கு முழு ஆதரவு கொடுப்போம். அரசுக்கு எங்கள் துணை எப்போதும் உண்டு' என மாற்று முகாமில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் நமது கூட்டணி கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்பு கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இன்று மிக மகிழ்ச்சியாக சட்டமன்ற உறுப்பினர்கள் எடுத்த இந்த முடிவு வரலாற்றுச் சிறப்பு முடிவு மிக்க முடிவாகும். இந்த முடிவின் மூலம், குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நினைத்தவர்களின் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது.
அம்மாவுக்கு துரோகம் செய்யும் சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். ஆக மொத்தம் 111 எம்.எல்.ஏ.க்கள் இன்று எங்களுக்கு ஆதரவு தந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், "வரும் 12-ஆம் தேதி கூடும் பொதுக் குழு குறித்து இப்போது என்னால் எதுவும் கருத்து கூற முடியாது. ஆனால், சில பொதுக் குழு உறுப்பினர்கள் கூறும் கருத்துகளால் எதுவும் நடந்துவிடாது. சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் திருமணம் நின்றுவிடாது. பொதுக்குழுவில் நூறு சதவீதம் அனைவரும் ஒற்றுமையுடன் உள்ளோம். நிச்சயம் கல்யாணம் நடந்தே தீரும்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.