சென்னையின் சில இடங்களில் இன்று (வியாழக்கிழமை) மிதமான மழை பெய்யும் எனவும், ஆனால், வெள்ளம் குறித்த அபாயம் தற்போது வரை ஏதும் இல்லை எனவும், தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, வியாழக்கிழமை காலை 8 மணியளவில் அவர் தன் முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டதாவது,
”சென்னையின் சில இடங்களில் விரைவில் மழை பெய்யும். வறட்சியால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது. இன்றைக்கு சென்னையில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்யும். சில சமயங்களில் மழை பெய்வதற்கான இடைவெளி மிக நீண்ட நேரம் கொண்டதாக இருக்கும். இதுவரை வெள்ளம் குறித்த பயம் ஏதும் இல்லை. எந்த வதந்தியையும் நம்ப வேண்டாம்.
சென்னையின் சில இடங்களில் இன்று மழை பெய்யும். ஆனால், அது கனமழையாக இருக்காது. பல வருடங்கள் கழித்து திருநெல்வேலியில் கனமழை பெய்திருக்கிறது. அங்கு, 15 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினத்தில் 136 மி.மீ மழை பதிவாகியுள்ளது. திருச்செந்தூரில், ஒரு வருடம் கழித்து 65 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தூத்துக்குடியிலும் ஒரு வருடம் கழித்து மழை பெய்தது. டெல்டா பகுதிகளிலும் தற்போது மழை பெய்துவருகிறது. இந்த நிலைமை மணிநேரங்களுக்கு நீடிக்கும்.
சென்னையின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மேகக்கூட்டங்கள் நிலைகொண்டிருக்கின்றன. இந்த மேகக்கூட்டங்கள் சென்னைக்கு அருகில் இன்று நகரும். அதனால், மழை பெய்யும். ஆனால், வெள்ளம் குறித்து பயப்பட தேவையில்லை. சில இடங்களில் மழை, மிகச்சிறிய காலத்திற்கே நீடிக்கும். சென்னை முழுதும் மழை பெய்யாது.”, என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.