11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாக மாணவர்கள் தரப்பில் பரவலாக கூறப்பட்டு வரும் நிலையில், மாணவர்களுக்கு அத்தேர்வுகளில் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட மாட்டாது என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் வினாத்தாள்கள் கடினமாக இருப்பதாக சில மாணவர்களும், எளிமையாக இருப்பதாக சில மாணவர்களும் தெரிவித்து இருந்தனர். இதுகுறித்து, கல்வித்துறை உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மேலும், அகில இந்திய அளவில் பொதுத் தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதை மாணவர்களும் பெற்றோர்களும் வரவேற்றுள்ளனர் என்றார்.
இந்த நிலையில், 10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வுகளுக்கு கருணை மதிப்பெண் கிடையாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், புதிய ஆசிரியர் நியமனங்களும் கிடையாது எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.