நேற்று நடந்த பிக்பாஸ் ஷோவின் போது சக்தி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டார். அதற்கு முன் அவர் கமல் ஹாசனுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது பேசிய சக்தி, "நான் இதற்கு முன் எலிமினேட் செய்யப்பட்டு வீட்டிற்கு சென்றவுடன் எனது வேலையைப் பார்க்க தொடங்கிவிட்டேன். நான் மறுபடியும் உள்ளே போவேன்னு நெனக்கல. இங்க இருந்த போது home sickness இருந்தது. சரி, அடுத்த வேலைகளைப் பார்க்கலாம்னு நெனச்சேன். ஆனால் வெளியே போய் விட்ட பிறகு இங்கு என்ன நடக்கிறதோ என்கிற பதற்றத்துடன் தினசரி நிகழ்ச்சிகளைப் பார்ப்பேன். வெளியே வந்த பிறகு பிக் பாஸ் குடும்பத்தை பிரியற உணர்வு வந்துடுச்சு. அது மட்டுமில்லாமல் சிலரை டிரிக்கர் பண்ணணும். இதுவரைக்கும் ஷத்திரியனா இருந்துட்டேன். ஆனால் உள்ள சாணக்கியனா இருந்தாத்தான் பிழைக்க முடியும்னு தோணுது. அப்படி சிலர் இருக்காங்க" என்றார்.
தொடர்ந்து பேசிய சக்தி, சினேகன் மற்றவர்களைப் பற்றி புறம் பேசிக் கொண்டே இருக்கிறார். கமல் தன்னை அரசியலுக்கு வரச் சொன்னது சீரியஸா, கிண்டலா என்ற சந்தேகம் வந்த போது சிநேகனிடம் அது பற்றி கேட்டதாகவும் 'அவர் காமெடியா சொல்லியிருப்பாரு' என்ற சிநேகன், மற்றவர்களிடம் ‘அவர் நக்கல் செஞ்சிருக்காரு. அது புரியாம சக்தி இருக்காரு’ என்று புறம் பேசியதால் சிநேகன் மீது அதிருப்தி அடைந்தேன் என்றார்.
இதுகுறித்து பேசிய கமல், "இப்போது இருக்கின்ற அரசியல்வாதிகளை நக்கல் செய்யும் அளவிற்கு கொண்டுவந்து விட்டார்கள். இதனால் தான் உங்களைப் பார்த்து நீங்களும் அரசியலுக்கு வரலாமே என்றேன். இனி யாரைப் பார்த்தும் நான் 'நீங்களும் அரசியலுக்கு வரலாம்' என நக்கலாக கேட்கமுடியாது. இனி யார் எப்படி இருந்தாலும், நான் இனிமேலும் முகமூடி போட்டுக் கொள்வதாக இல்லை" என்று தெரிவித்தார்.